யாழ் பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராக கணிதப் புள்ளி விபரவியல் துறையின் மூத்த பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் யாழ் பல்கலைக் கழக துணைவேந்தர் பதவி வெற்றிடமாக இருந்து வந்த நிலையில் அப்பதவிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது.
இலங்கையிலுள்ள பல்கலைக் கழகங்களுக்குத் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான புதிய நடைமுறைகள் அடங்கிய சுற்றுநிருபம் கடந்த மே மாத முற்பகுதியில் வெளியிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவிக்காக மே 15 ஆம் திகதி பதிவாளரினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.
அதன் அடிப்பயைடில் கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களில் இருந்து சுற்றுநிருபத்துக்கு அமைய இடம்பெற்ற மதிப்பீடுகளின் படி, கடந்த 12 ஆம் திகதி நடைபெற்ற விசேட பேரவை அமர்வில் வைத்து திறமை அடிப்படையில் பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா, பேராசிரியர் கு. மிகுந்தன் மற்றும் பேராசிரியர் த. வேல்நம்பி ஆகிய மூவர் பரிந்துரை செய்யப்பட்டு, அவர்களின் விபரங்கள் ஜனாதிபதியின் தெரிவுக்காக அனுப்பப்பட்டிருந்தன.
பல்கலைக் கழகப் பேரவையின் பரிந்துரையின் அடிப்படையில், மூவரினது பெயர்களையும் கடந்த 13 ஆம் திகதி பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைத்திருந்தது.
பல்கலைக்கழக கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு ஆகியவற்றின் பரிந்துரைகளுடன் கிடைத்த மூன்று பெயர்களில் இருந்து, பல்கலைக் கழகப் பேரவை மதிப்பீட்டின் படி முதல் நிலையைப் பெற்றருந்த பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமித்திருக்கிறார்.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டதன் அடிப்படையில் பேராசிரியர் எஸ்.சிறி சற்குணராஜா அவர்களுக்கான நியமனக் கடிதம் கிடைக்கப் பெற்றுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.
இதேவேளை 2017ஆம் ஆண்டு துணைவேந்தர் தெரிவுக்காக நடைபெற்ற மதிப்பீட்டின் அடிப்படையிலும் பேரவையால் முதல் தெரிவாக பரிந்துரைக்கப்பட்ட பேராசிரியர் சிறீசற்குணராஜாவுக்கான நியமனத்தை அன்றைய நல்லாட்சி அரசின் ஜனாதிபதி நிராகரித்திருந்த நிலையில், பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன் துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இருந்தபோதிலும் குறித்த காலத்தின் பின்னர் அவரை பதவியிலிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நீக்கியிருந்த நிலையில் பேராசிரியர் கந்தசாமி பொறுப்பு வாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்பட்டு தற்போது வரையில் செயற்பட்டுவந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்